தர்மபுரியில், 1,500 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் அமைச்சர் வழங்கினார்

தர்மபுரியில் 1,500 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

Update: 2019-10-06 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூகநல அலுவலர் கீதா வரவேற்று பேசினார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 1,500 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.6 கோடியே 76 லட்சம் மதிப்பிலான திருமண உதவியையும் வழங்கினார். இதில் ஆயிரத்து 206 பட்டதாரிகள் மற்றும் 294 பட்டதாரி அல்லாதோர் ஆவர். விழாவில் அவர் பேசியதாவது:-

உயர்கல்வி

தர்மபுரி மாவட்டத்தில் படித்த ஏழை பெண்களுக்கு திருமண உதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12-ம் ஆண்டு முதல் இதுநாள் வரை மொத்தம் 24 ஆயிரத்து 106 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்துடன், திருமண நிதி உதவியாக ரூ.82 கோடியே 9 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்கள் 8 ஆயிரத்து 728 பேர் ஆவர். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் மொத்தம் 15 ஆயிரத்து 378 பேர் ஆவர். இந்த திட்டத்தினை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் கட்டாயம் உயர்கல்விவரை படிக்க வைக்க முன்வர வேண்டும். பொருளாதாரத்திலும், வாழ்க்கை தரத்திலும் பெண்கள் முன்னேற்றம் அடைய அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர்கள் நாகராஜன், விஸ்வநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் பூக்கடை முனுசாமி, கோபால், கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், அங்குராஜ், ஆறுமுகம், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்