சேந்தமங்கலம் அருகே பரபரப்பு 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

சேந்தமங்கலம் அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-06 22:15 GMT
சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வால்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (31). இந்த தம்பதிக்கு ஜெயஸ்ரீ (14), சுபஸ்ரீ (8) என 2 மகள்கள் உள்ளனர்.

இதனிடையே கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை சவுந்தர்ராஜன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் லட்சுமி தனது இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்தார். அதன்பின்பு லட்சுமியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் லட்சுமி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ ஆகியோர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேந்தமங்கலம் அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்