ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் தங்கராஜ் (வயது 20).
இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசில் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தைலாகுளம் பகுதியில் தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற ரெயில்வே போலீசார், அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் என்ஜினீயரிங் மாணவர் தங்கராஜ் என்பது தெரியவந்தது. தங்கராஜின் உடல் பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசாரின் தொடர் விசாரணையில் தங்கராஜ், ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்தது.
அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.