உளுந்தூர்பேட்டை அருகே, வாலிபர் தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-06 22:30 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ரமேஷ் (வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரத்தில் ஏறும் போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அதன் பிறகு அவரால் நடக்க முடியாததால் வீட்டிலேயே இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் ரமேஷ், தன்னை கவனிக்க யாரும் இல்லை என்ற மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ரமேஷ், மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரமேசின் தந்தை ராதாகிருஷ்ணன் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்