படப்பை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தங்களுடைய உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

Update: 2019-10-06 21:44 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் மேற்கு தாம்பரம் கல்யாணசுந்தரம் தெரு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 50). இவருடைய மனைவி. தாட்சாயணி (வயது 40) கணவன்-மனைவி இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தங்களுடைய உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது தாம்பரத்தில் இருந்து மணிமங்கலம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லாரி சக்கரத்தில் சிக்கி தாட்சாயணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் கோபால் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணிமங்கலம் போலீசார் கோபாலை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாட்சாயணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்