துவாக்குடி அருகே காவலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது

துவாக்குடி அருகே தனியார் நிறுவன காவலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-08 22:15 GMT
துவாக்குடி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 37). தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர். இவர், அந்த நிறுவனத்தின் சார்பில் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை பகுதியில் சிப்காட்டில் ஒரு வருடமாக மூடிக்கிடக்கும் நிறுவனத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலாளியாக வேலைக்கு வந்தார்.

கடந்த 6-ந் தேதி இரவு கருப்பையாவை மர்ம நபர் மண்வெட்டியால் அடித்து கொலை செய்ததில், அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

வாலிபர் கைது

பின்னர் கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவன காவலாளிகளுக்குள் நடைபெற்ற மோதலில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த மாரனேரியை சேர்ந்த ராஜாராம்(35) என்பவர் கருப்பையாவை மண்வெட்டியால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜாராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்