களக்காட்டில் கொடூரம்: தண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை - தாய் கைது

களக்காட்டில் தண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அந்த குழந்தைகளின் தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-08 23:30 GMT
களக்காடு, 

நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் இசக்கி மகன் நம்பிராஜன் (வயது 30). இவருடைய மனைவி சங்கரி (26). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு முத்துவர்ஷினி (3) என்ற மகளும், 3 மாதமே ஆன ஆண் குழந்தை முத்து ஆசித்தும் உண்டு.

நம்பிராஜன் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சங்கரி தனது இரண்டு குழந்தைகளுடன் களக்காட்டில் உள்ள மாமனார் இசக்கி வீட்டில் வசித்து வருகிறார். சங்கரிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 2-வது பிரசவத்தில் மகன் பிறந்தபோது மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் இசக்கி வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த சங்கரி திடீரென தனது 2 குழந்தைகளையும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் மூழ்கடித்தார். இதில் குழந்தைகள் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். அப்போது குழந்தைகளின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். அங்கு குழந்தைகள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குழந்தைகளின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சங்கரியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தைகளை தாயே கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கரி மனநிலை பாதிக்கப்பட்டு அதன் காரணமாக குழந்தைகளை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்