வேலைக்கு சேர்ந்த 1 மாதத்தில் பெண் தபால் ஊழியர் தீக்குளித்து தற்கொலை

மன்னார்குடியில் வேலைக்கு சேர்ந்த 1 மாதத்தில் பெண் தபால் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-09 23:15 GMT
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மகள் பிரீத்தி (வயது 21). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் தபால் துறை தேர்வில் தேர்ச்சி பெற்று மன்னார்குடியை அடுத்த எடமேலையூர் தபால் நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.

இந்தநிலையில் மன்னார்குடி தாமரைக்குளம் வடகரையில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி இருந்து கடந்த 1 மாதமாக பணிக்கு சென்று வந்தார். நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரீத்தி பரிதாபமாக உயிரிழந்தார். பணியில் சேர்ந்து ஒரு மாதமே ஆன நிலையில் பிரீத்தி தீக்குளித்து இறந்ததற்கான காரணம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்