திடீர் உடல் நலக்குறைவு: அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆஸ்பத்திரியில் அனுமதி

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2019-10-09 23:00 GMT
நெல்லை, 

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பணியில் ஈடுபட்டார். அப்போது, வயிற்றுப்போக்கு காரணமாக அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உணவு ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் உடல்நலம் விசாரித்தனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட போது அமைச்சருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்