மோட்டார்சைக்கிளில் சென்றபோது சரக்குவேன் மோதியதில் 2 தறித்தொழிலாளிகள் பலி

மோட்டார்சைக்கிளில் சென்றபோது சரக்குவேன் மோதியதில் தறித்தொழிலாளிகள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-10-09 22:15 GMT
சங்ககிரி,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆலங்கூர் பகுதியை சேர்ந்தவர் சாந்த குமார் (வயது 27), தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அவருடைய 3 வயது மகன் பரணிதரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே அவனை சேலம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். இதற்காக மோட்டார் சைக்கிளில் மகனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளியான தனது நண்பர் முருகன் (40) என்பவரை உடன் அழைத்து சென்றார்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

2 பேர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சாந்தகுமாரும், முருகனும் அதே இடத்தில் பலியானார்கள். குழந்தை பரணிதரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. குழந்தை சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தகவலறிந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தகுமார், முருகன் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் பிரபுவை (27) தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்