பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறினார்.

Update: 2019-10-10 22:15 GMT
அரியலூர்,

பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள் சேர்க்கப்பட்டு தற்போது பயன் பெற்று வருகின்றனர். இதில் ஏற்கனவே பதிவு செய்துள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள், சேர்க்கப்படாமல் விடுபட்டு இருந்தால் அவர்கள் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்திற்கு சென்று www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். கணினி விவரம் தெரிந்த விவசாயிகள் தாங்களாகவே www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் பார்மர்ஸ் கார்னர் என்ற ஆப்சனில் சென்று நியூ பார்மர் ரிஜிஸ்ட்ரேசன் எனும் ஆப்சன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

திருத்தம் செய்யலாம்

இத்திட்டத்தில் ஏற்கனவே இணைந்த விவசாயிகளில், முதல் 2 தவணை நிதி பெற்றவர்கள் சிலருக்கு 3-வது தவணை வரவு வைக்கப்படாமல் இருந்தால், தங்களது பெயரை ஆதார் அட்டையில் உள்ளபடி www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் பார்மர்ஸ் கார்னர் என்ற ஆப்சனில் சென்று எடிட் ஆதார் டீடைல்ஸ் எனும் ஆப்சன் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம். இதை தாங்கள் அல்லது பொது இ-சேவை மையத்தில் சரிபார்த்து திருத்தம் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் விவரங்கள் சரியாக பொருந்தியிருந்தால் மட்டுமே 3-வது தவணை நிதியானது விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்