கயத்தாறு அருகே இரு தரப்பினர் மோதல்: முதியவர் உள்பட 2 பேர் காயம் - 2 வாலிபர்கள் கைது

கயத்தாறு அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.

Update: 2019-10-10 22:30 GMT
கயத்தாறு, 

கயத்தாறு அருகே பணிக்கர்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோட்டைசாமி (வயது 45). இவருடைய மகன் மணிகண்டன் (19). அதே ஊரில் கீழ தெருவில் வசிப்பவர் பாண்டியராஜன் (74). இவருடைய மகன் மொட்டையசாமி (20). விவசாயிகளான இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் மாலையில் பாண்டியராஜன் தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், உன்னுடைய மகனுடன் சேர்ந்ததால்தான் என்னுடைய அண்ணன் பூல்பாண்டி கொலை செய்யப்பட்டார் என்று கூறி தகராறு செய்து, பாண்டியராஜனை கம்பால் தாக்கினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதை தொடர்ந்து இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

இதில் மொட்டையசாமி தாக்கியதில் மணிகண்டனின் தந்தை கோட்டைசாமி காயமடைந்தார். இதில் காயம் அடைந்த பாண்டியராஜன், கோட்டைசாமி ஆகிய 2 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், மொட்டையசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்