ஈரோட்டில் மாடியில் இருந்து குதித்து லாட்ஜ் உரிமையாளர் தற்கொலை

ஈரோட்டில், மாடியில் இருந்து குதித்து லாட்ஜ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-10-11 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு கோட்டை பழனிமலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 56). இவரது மனைவி சந்திரிகா (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

குணசேகருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் சொந்தமான லாட்ஜ் ஈரோடு பஸ் நிலையம் அருகில் மேட்டூர் ரோட்டில் உள்ளது. குணசேகர் தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். ஆனால் நேற்று நடைபயிற்சிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து நேரடியாக லாட்ஜிக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் லாட்ஜில் எத்தனை பேர் தங்கி உள்ளனர் என்ற விவரத்தை கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாடியாக சென்று அறைகளை பார்வையிட்டு உள்ளார்.

பின்னர் 3-வது மாடியில் இருந்து மொட்டை மாடிக்கு சென்ற குணசேகர் திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். ரோட்டில் விழுந்த அவர் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று குணசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக குணசேகர் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்