பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைப்பு - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-10-11 22:45 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள், முதியோர், நலிவுற்றோர், ஆதரவற்றோர் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து குழுக்களாக உருவாக்கி அவர்களுக்கு பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வங்கிகள் மூலம் எளிதில் கடன்பெற வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப் படுகிறது.

2016-ம் ஆண்டு முதல் நடப்பு நிதி ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி இணைப்பு திட்டத்தின்கீழ் 23 ஆயிரத்து 657 குழுக்களுக்கு ரூ.7 கோடியே 32 லட்சம் சுயதொழில் புரிவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், சமுதாய மூலதன நிதி உதவி திட்டத்தின்கீழ் 2017-ம் ஆண்டு முதல் நடப்பு நிதிஆண்டு வரை 2 ஆயிரத்து 280 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.9 கோடியே 84 லட்சம் சுய தொழில் புரிவதற்கு மானியத்துடன் வங்கி கடன் உதவி என புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.17 கோடியே 16 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, மகளிர் சுயஉதவிக் குழுவினர், எந்திரம் மூலம் மறு சுழற்சி செய்யப்பட்ட 21 ஆயிரத்து 184 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, குன்றாண்டார்கோவில், விராலிமலை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை வர்த்தக நிறுவனங்களுக்கு அதிகளவில் தைத்து வழங்குகின்றனர்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்