ஆலங்குடி அருகே, 100 நாள் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ஆலங்குடி அருகே 100 நாள் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-10-11 22:30 GMT
ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்கோட்டை ஊராட்சி கிராம மக்களுக்கு 100 நாள் வேலை கொடுக்காததை கண்டித்து கடந்த ஆகஸ்டு மாதத்தில் சாலை மறியல் நடைபெற்றது. இதுதொடர்பாக ஒன்றிய அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, விரைவில் 100 நாள் வேலை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், 2 மாதங்கள் ஆகியும் இதுவரை மாங்கோட்டை ஊராட்சி கிராம மக்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், உடனடியாக 100 நாள் வேலை வழங்கக்கோரியும் மாங்கோட்டை ஊராட்சி சேர்ந்த கிராம மக்கள் ஆலங்குடியில் இருந்து மழையூர் செல்லும் சாலையில் மாங்கோட்டை விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரி வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார், பள்ளி செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒரு மணி நேரமாக காத்திருக்கின்றனர்.

அவர்களுக்கு வழிவிடுங்கள், நாங்கள் அதிகாரிகளிடம் பேசி வேலை கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் என தெரிவித்தனர். அதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக ஆலங்குடி-மழையூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்