பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

விடுதிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று காப்பாளர் ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-10-13 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது.

சங்க நிறுவன தலைவர் சகாதேவன், மாநில தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்கள். மாநில பொதுச்செயலாளர் மணிமொழி, திருச்சி மாவட்ட தலைவர் கருணராஜ் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் வெற்றிவேல் பிள்ளை வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பதவி உயர்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை மாவட்ட அளவில் வருவாய்த்துறையில் இருந்து பிரித்து தனித்துறையாக சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், விடுதிகளில் பணிபுரியும் பட்டதாரி காப்பாளர்களுக்கு மாவட்டத்திற்கு ஒரு புதிய பணியிடமான உதவி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் என்ற பணியிடத்தை உருவாக்கி பதவி உயர்வு வழங்க வேண்டும். இடைநிலை காப்பாளர்களுக்கு அலுவலக கண்காணிப்பாளர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கி பதவி உயர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்வது.

விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர், காப்பாளினிகள், காவலர் மற்றும் ஏவலர், சமையலர், துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், விடுதிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தற்போது மாணவர்களுக்கு பொது வினியோக திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் ரேஷன் அரிசியை நிறுத்திவிட்டு முதல் ரக அரிசியின் மூலம் உணவு வழங்கவேண்டும், புதிதாக விடுதியில் சேரும் மாணவர்களுக்கு ‘சூட்கேஸ்’ வழங்க வேண்டும்.

உணவு கட்டணம்

விலைவாசி உயர்வை சமாளிக்கவும், மாணவர்களின் நலன் கருதியும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு கட்டணத்தை ரூ.900-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.1,300 ஆக உயர்த்த வேண்டும். உணவு கட்டண தொகையில் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய செலவினங்களுக்காக 50 சதவீத உணவு கட்டண தொகையை முன்பணமாக வழங்க வேண்டும். பாகுபாடு இன்றி அனைத்து விடுதிகளுக்கும் பராமரிப்பு தொகையை ரூ.50 ஆயிரம் ஆக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி மாவட்ட செயாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்