தூத்துக்குடியில் பரிதாபம் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை சாவு

தூத்துக்குடியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.

Update: 2019-10-14 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி யோகேசுவரர் காலனியை சேர்ந்தவர் முருகன் என்பவருடைய மகன் மாரிமுத்து (வயது 30). இவர் தூத்துக்குடி சிவன் கோவில் தெருவில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி. இவர்களுக்கு 5 வயதில் மகிம்சேது என்ற மகனும், 3 வயதில் மிருதுனாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

மிருதுனாஸ்ரீ கடந்த 12-ந்தேதி இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது திடீரென அவள் மாயமானாள். இதனை அறிந்த செல்வராணி மற்றும் மாரிமுத்து அந்த பகுதியில் குழந்தையை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் குழந்தையை காணாமல் பெற்றோர் பதறி துடித்தனர்.

வெகுநேரம் தேடிய பின்னர் மாரிமுத்துவின் வீட்டுக்கு எதிரே பொன்னுசாமி என்பவர் கட்டி வரும் புதிய வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியின் உள்ளே மிருதுனாஸ்ரீ தவறி விழுந்து கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது குழந்தை பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்