விஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை

தனியார் ஆஸ்பத்திரி நர்சு, விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-10-15 22:30 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் அண்ணாமலைநகர், ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் நந்தினி (வயது 24). இவர், திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த நந்தினி திடீர் என்று வாயில் நுரை தள்ளி, மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், நர்சு நந்தினி கடந்த சில தினங்களாக சோகத்தில் இருந்ததாகவும், நேற்று முன்தினம் ஏற்கனவே வீட்டில் தயாராக வாங்கி வைத்து இருந்த கலைக்கொல்லி பூச்சி மருந்தை ஊசியின் மூலம் தனக்குத்தானே ஏற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

தற்கொலைக்கு முன்பாக நந்தினி, தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அவர், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தனது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக நர்சு நந்தினி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்