வேலூரில் முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
வேலூரில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
வேலூர்,
வேலூர் பாகாயத்தில் உள்ள தென்றல் நகரில் வசித்துவருபவர் தர்மகவுண்டகாசி (வயது72). முன்னாள் ராணுவவீரர். இவருடைய சொந்த ஊர் வேலூரை அடுத்த அப்புக்கல் ஆகும். சம்பவத்தன்று தர்மகவுண்டகாசி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அப்புக்கல் கிராமத்திற்கு சென்றுவிட்டார்.
அடுத்தநாள் காலையில் அவருடையவீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தர்மகவுண்டகாசி விரைந்துவந்து பார்த்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் திறந்திருந்தது. அதில் வைத்திருந்த 13 பவுன் நகைகள் திருட்டுப்போயிருந்தது.
மர்ம ஆசாமிகள் பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தர்மகவுண்டகாசி பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.