காதல் விவகாரத்தில் பெண் வீட்டார் மிரட்டியதால் என்ஜினீயரின் தாய் தற்கொலை வழக்கில் 3 பேர் கைது

காதல் விவகாரத்தில் பெண் வீட்டார் மிரட்டியதால் மனமுடைந்த என்ஜினீயர் தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-16 22:15 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே பள்ளியாடி தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி கனகம். இவர்களுடைய மகன் ஆஸ்டின் சந்துரு, சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஷியாம் என்பவருடைய மகளுக்கும் காதல் ஏற்பட்டது. அவர் டாக்டராக உள்ளார்.

தூரத்து உறவுமுறையில் ஆஸ்டின் சந்துருவும், டாக்்டரும் அண்ணன், தங்கை என்று கூறப்படுகிறது. இதனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் பெண் டாக்டருடன், ஆஸ்டின் சந்துரு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.

தாய் தற்கொலை

இதனையடுத்து பெண் வீட்டார் ஆஸ்டின் சந்துரு வீட்டுக்கு சென்றனர். அங்கு, அவருடைய தாயார் கனகத்தை கண்டபடி பேசியதாகவும், மிரட்டியதாகவும் தெரிகிறது. மனமுடைந்த கனகம் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த திராவகத்தை குடித்து விட்டார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

3 பேர் கைது

இதுதொடர்பாக பெண்ணின் தந்தை ஷியாம், தாய் ஜெயந்தி, உறவினர்கள் குமார், அவருடைய மனைவி செல்வராணி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இந்தநிலையில் ஷியாம், குமார், செல்வராணியை போலீசார் கைது செய்தனர். இதில் கைதான குமார், ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி பிரமுகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்