திண்டுக்கல், மோட்டார்சைக்கிள் - கார் மோதல் : 2 பேர் படுகாயம்

திண்டுக்கலில், மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-10-17 21:45 GMT
பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி (29). கூலித்தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும், சித்தரேவுவில் இருந்து சித்தையன்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கண்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தங்கபாண்டி பின்னால் அமர்ந்து இருந்தார். ஊத்துவாய்க்கால் என்னுமிடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

அப்போது சித்தையன்கோட்டையில் இருந்து சித்தரேவு நோக்கி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயமுருகன் (37) ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணன், தங்கபாண்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்த ஜெயமுருகன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்