அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து மனைவிக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் விசாரணைக்கு பயந்து டிரைவர் தற்கொலை

கச்சிராயப்பாளையம் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து மனைவியை அரிவாளால் வெட்டிய டிரைவர், போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-10-17 22:30 GMT
கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கோமுகி அணை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சீனிவாசன் (வயது 28), லாரி டிரைவர். இவரது மனைவி பாரதி(25). இவர்களுக்கு நிலா(8) என்ற மகளும், நித்திஷ்(6) என்ற மகனும் உள்ளனர். பாரதி அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சீனிவாசன் தினசரி குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பாரதி மல்லிகைபாடி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து, வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று காலை பாரதி வழக்கம் போல் அங்கன்வாடி மையத்துக்கு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் சீனிவாசன், அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து பாரதியை தன்னுடன் வந்து வாழும்படி அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாரதியின் தலையில் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு அங்கன்வாடி மையத்தில் இருந்து வெளியே ஓடினர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார், சீனிவாசனை பிடிப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சீனிவாசன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாரதியை வெட்டிய சீனிவாசன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அண்ணாமலை கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு, கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்