அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மக்களை குழப்புகிறார்: ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம் - விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம் ஆவர். ஆனால் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பொய் தகவலை பரப்பி வருகிறார் என்று பகிரங்கமாக தெரிவிப்பதாக விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2019-10-17 23:15 GMT
விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து நேற்று தொகுதிக்குட்பட்ட பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திறந்த வேனில் சென்று, பொதுமக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எங்களது ஆட்சியில் என்ன என்ன செய்தோம் என்பதை பட்டியலிட்டு உண்மையாகவும், நேர்மையாகவும் தெரிவித்து வருகிறோம். ஆனால் நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் போது நானும், அமைச்சர்களும் பொய் சொல்வதாக கூறி இருக்கிறார். நாங்கள் புள்ளி விவரத்தோடு தான் பேசுகிறோம். எனவே பொத்தாம் பொதுவாக நீங்கள் சொல்லக்கூடாது. அதில் தவறு இருந்தால் சொல்லுங்கள், அதற்கு பதில் சொல்கிறோம். தமிழகத்தில் சாலை உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளையும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளோம்.

ஜெயலலிதா மரணம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் பேசி வருகிறார். அவர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மக்களை குழப்புகிறார். தி.மு.க.வினர் ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டதால் தான் அவர் சிறைக்கு சென்றார். அதில் விடுதலையாகி வெளியே வந்த நிலையில், அதை பொறுக்க முடியாமல், ஜெயலலிதாவை பழிவாங்கவும், அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று நினைத்தும் உச்சநீதிமன்றத்தில் தி.மு.க.வினர் மேல் முறையீடு செய்தார்கள். இவ்வாறு அவருக்கு மன உளைச்சல் கொடுத்ததாலும், சிறைக்கு சென்றதாலும் தான் உரிய முறையில் ஜெயலலிதாவால் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

இதன் மூலம் ஜெயலலிதாவின் இறப்புக்கு கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான் காரணம். எனவே அவரது இறப்பு பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நான் பகிரங்கமாக சொல்கிறேன், ஜெயலலிதாவின் மரணத்துக்கு முழுக்க முழுக்க காரணம் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவர் மு.கஸ்டாலின் தான்.

உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. தான் நடத்தவில்லை என்று பேசுகிறார். யார் நடத்தவில்லை?. நாங்கள் 26-09-2016 அன்று தேர்தல் அறிவிப்பு கொடுத்து அதற்கான பணிகள் தொடங்கியது. வேட்பு மனுக்களும் பெறப்பட்டு வந்தன. இந்த நிலையில் இப்போது தேர்தல் நடத்தினால் தி.மு.க. வெற்றி பெறாது என்று நினைத்து, பழங்குடியினருக்கு சரியான இட ஒதுக்கீடு செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தேர்தலை நடத்தவிடாமல் நிறுத்திவிட்டனர்.

வேட்பு மனுக்கள் வாங்கப்பட்ட காலக்கட்டத்தில் இப்படி சாக்குபோக்கு சொல்லி நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே உங்களால் தான் நிறுத்தப்பட்டது, எங்களால் அல்ல.

தற்போது இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் தான் காலதாமதம் ஏற்பட்டது. இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டது. எனவே டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து, அனைவரும் பதவி ஏற்பார்கள்.

எங்களிடம் தற்போது 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இடைத்தேர்தலில் 2 தொகுதியிலும் வெற்றி பெற்று 124 பேராக உயரப் போகிறோம். பெருபான்மை எம்.எல்.ஏ.க்களுடன் தான் நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம். மைனாரிட்டி ஆட்சி செய்த நீங்கள் தான், மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தீர்கள். ஆகையால் எங்களை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேலும் செய்திகள்