வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை: மாமியாருக்கு 7 ஆண்டு சிறை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு

வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

Update: 2019-10-17 22:45 GMT
சேலம், 

ஓமலூர் கருப்பணம்பட்டி அருகே உள்ள ராமர்குட்டை காட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிமுருகன். இவரது மனைவி வள்ளி (வயது 45). இவர்களது மகன் சங்கர் என்கிற சம்பந்தமூர்த்தி (27). இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். சம்பந்தமூர்த்திக்கும், அந்த பகுதியை சேர்ந்த மீனா (24) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

இதனால் மாமியார் வள்ளி, மருமகள் மீனாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்து உள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மீனா கடந்த 17.1.2014 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிமுருகன், வள்ளி, சம்பந்தமூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் மாமியார் வள்ளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பழனிமுருகன், சம்பந்தமூர்த்தி ஆகிய 2 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்