கணவரை காப்பாற்ற முயன்ற பெண் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

கணவரை காப்பாற்ற முயன்ற பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Update: 2019-10-17 23:00 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டி திடீர் காலனியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(வயது 45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான அழகுராஜ்(38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 1.11.2009 அன்று அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வெள்ளைச்சாமியிடம் அழகுராஜ் தகராறு செய்ததுடன், கத்தியால் அவரை குத்த முயன்றார்.

அப்போது வெள்ளைச்சாமியின் மனைவி சண்முகத்தாய் ஓடி வந்து கணவரை காப்பாற்ற முயன்றார். இதில் சண்முகதாய்க்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இந்த கொலை தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுராஜை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, அழகுராஜூவுக்கு இரண்டு பிரிவுகளில் தலா ஒரு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். மேலும் இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்