வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்; 200 பேர் கைது

வடலூரை புனித நகரமாக அறிவிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-19 23:00 GMT
வடலூர்,

வள்ளலார் வாழ்ந்த பகுதியான வடலூர் கருங்குழி, மேட்டுக்குப்பம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் அகற்ற வேண்டும். வடலூரை புனித நகரமாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தலைமையில் நகர செயலாளர் குமரவேல், ஒன்றிய செயலாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் வடலூர் நான்குமுனை சந்திப்புக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மேற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன், வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட தலைவர் முருகன், மாநில இளைஞரணி செயலாளர் வி.கே.முருகன், தொகுதி செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், வடலூர் இன்ஸ்பெக்டர் ரவீந்திரராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்