பென்னாகரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மர்ம சாவு - பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தார்

பென்னாகரத்தில் பூட்டிய வீட்டில் அரசு பள்ளி ஆசிரியர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-10-19 22:45 GMT
பென்னாகரம்,

திண்டுக்கல் மாவட்டம் சில்வார்பட்டியை சேர்ந்தவர் சூர்யகுமார் (வயது 35). இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சிகரலபள்ளி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பென்னாகரம் மின்வாரிய அலுவலகம் அருகில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற அவர் உடல் நலம் சரி இல்லை என்று கூறி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியர் சூர்யகுமார் வசித்து வந்த வீடு நேற்றுவரை திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர். ஆனால் கதவு உள்பக்கமாக தாழ்போடப்பட்டு இருந்தது. அவருடைய செல்போனை தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆசிரியர் சூர்யகுமார் பிணமாக கிடப்பது தெரியவந்தது. உடல் அருகில் மாத்திரைகள் அதிக அளவில் கிடந்தன. இதையடுத்து போலீசார் சூர்யகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆசிரியர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்