மானூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் சாவு

மானூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-10-20 22:30 GMT
மானூர், 

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் வனராஜன். கூலி தொழிலாளி. இவருக்கு இசக்கியம்மாள் (வயது 10) என்ற மகளும், கவுதம் (9) என்ற மகனும் உண்டு. கவுதம் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவனுக்கு கடந்த சில நாட்களாக திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக கவுதம் உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவனுக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கவுதமுக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அவனை உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், கவுதம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மானூர், உக்கிரன்கோட்டை பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் சுகாதார பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்