கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்மழை: பழனி வரதமாநதி அணை நிரம்பியது

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பழனி வரதமாநதி அணை நிரம்பியது.

Update: 2019-10-22 22:15 GMT
பழனி,

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகள் உள்ளன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைப் பகுதிகளில் நீர்வரத்து இன்றி நீர்மட்டமும் குறைந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதையொட்டி நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழனி வரதமாநதி அணையின் நீர்மட்டம் 60 அடியை நெருங்கி இருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை பழனி வரதமாநதி அணையின் மொத்த உயரமான 66 அடியை எட்டியது. அப்போது அணையின் மறுகால் பகுதி வழியே சுமார் 10 நிமிடம் மட்டும் தண்ணீர் வழிந்தோடியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. இந்நிலையில் பழனி சப்-கலெக்டர் உமா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று நேரில் வந்து அணையை ஆய்வு செய்தனர். இதற்கிடையே மாவட்டத்துக்கு ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையில் தற்போது 46 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 611 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 80 அடி நீர்மட்ட உயரம் கொண்ட குதிரையாறு அணையில் தற்போது 49 அடி வரையில் தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 அடி உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

மேலும் செய்திகள்