திருவையாறு அருகே, வீட்டை உறவினர்கள் இடித்ததால் வி‌‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

திருவையாறு அருகே வீட்டை உறவினர்கள் இடித்ததால் வி‌‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் மீது போலீசார் வழக் குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2019-10-22 22:45 GMT
திருவையாறு, 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள செம்மங்குடி இலுப்பை தோப்பு புது தெருவில் வசித்து வருபவர் கருப்பையன் (வயது57). அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் செம்மங்குடியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகளை திருமணம் செய்து கொண்டு செம்மங்குடியிலேயே வசித்து வருகிறார். இவருடைய மகன் சுபா‌‌ஷ் சந்திரபோஸ் (25). ஆறுமுகத்துக்கு குருமூர்த்தி, லோகநாதன் என 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கருப்பையன் தனது மாமனார் ஆறுமுகம் கொடுத்த இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த இடத்தில் அவருடைய மகன் சுபா‌‌ஷ்சந்திரபோஸ் வீடு கட்டி வந்தார். இந்த வீட்டை குருமூர்த்தி, அவருடைய மனைவி பானுமதி, மகன் இளையராஜா ஆகியோர் இடித்து விட்டனர். இடப்பிரச்சினை காரணமாக வீடு இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த சுபா‌‌ஷ் சந்திரபோஸ் நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்தை (வி‌‌ஷம்) குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுபா‌‌ஷ் சந்திரபோஸ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கருப்பையன் கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக குருமூர்த்தி, பானுமதி, இளையராஜா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே வீட்டை இடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என சுபா‌‌ஷ்சந்திரபோஸ் பேசுவது போன்ற ‘வீடியோ’ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வீட்டை உறவினர்கள் இடித்ததால் வி‌‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்