கார்களை விற்பனைக்கு தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.77 லட்சம் மோசடி கேரள நிறுவனத்தினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு

கார்களை விற்பனைக்கு தருவதாக கூறி கரூர் தொழில் அதிபரிடம் ரூ.77 லட்சம் மோசடி செய்த கேரள நிறுவனத்தினர் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-23 22:15 GMT
கரூர்,

கரூர் புதிய பை-பாஸ் ரோட்டில் கார்களுக்கு அலங்கார பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் நிறுவனம் உள்ளது. மதன்குமார் என்பவர் இதனை நடத்தி வருகிறார். இவர் கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். இவர் கேரளாவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கார்களை வாங்கி விற்பனை செய்ய அந்நிறுவனத்திடம் ரூ.1 கோடிக்கு ஒப்பந்தம் போட்டார். மேலும் பல்வேறு தவணைகளாக நிறுவனத்திடம் பணத்தை மதன்குமார் கொடுத்தார். மொத்தம் ரூ.77 லட்சம் வரை செலுத்தியிருந்தார்.

இந்தநிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப்படி அந்நிறுவனம் கார்களை மதன்குமாருக்கு வழங்கவில்லை. இது தொடர்பாக அந்நிறுவனத்தினரிடம் கேட்டபோது மதன்குமாரை அவர்கள் தகாதவார்த்தையால் திட்டியுள்ளனர். கேரள நிறுவனத்தினர் கார்களை வழங்காமல் ரூ.77 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

8 பேர் மீது வழக்குப்பதிவு

இந்தநிலையில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக மதன்குமார் புகார் அளித்தார். அதன் பேரில் கேரளாவை சேர்ந்த அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ்ஸ்ரீ, துணை பொது மேலாளர் அரவிந்த் மற்றும் ஊழியர்கள் உள்பட 8 பேர் மீது இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்