விவசாயிக்கு அரிவாள் வெட்டு: மைத்துனர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை

விவசாயியை அரிவாளால் வெட்டிய மைத்துனர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-10-23 23:00 GMT
தென்காசி, 

தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராக்கன் (வயது 74). இவர் கடந்த 23-8-2011 அன்று தனது வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது மைத்துனரான அதே ஊர் நடுத்தெருவை சேர்ந்த சண்முகம் என்ற ராஜன் (61), அதே பகுதியை சேர்ந்த சற்குணம் (60) ஆகியோர் அங்கு வந்தனர்.

சண்முகம் கையில் அரிவாளுடன் ராக்கனை பார்த்து, நாங்கள் நினைத்த இடத்தை நீ வாங்கியதோடு மட்டுமல்லாமல் தென்னை மட்டைகளை என் இடத்திலேயே போடுகிறாயா? என கூறிக்கொண்டு அவரை வெட்டினார். சற்குணம் தென்னை மட்டையால் ராக்கனை தாக்கினார். இதில் ராக்கன் படுகாயமடைந்தார்.

இதுபற்றி தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். தென்காசி கூடுதல் உதவி அமர்வு நீதிபதி ரஸ்கின் ராஜ் இந்த வழக்கினை விசாரித்து, சண்முகம், சற்குணம் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்