வீடுகளில் புகுந்து நகை கொள்ளை; வாலிபர் கைது

மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-10-23 23:00 GMT
பூந்தமல்லி,

மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருக்கும் வீடுகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. இதையடுத்து மாங்காடு இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் பொற்பாதம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மாங்காடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதையடுத்து, அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர் குன்றத்தூர், பாலாஜி நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 19) என்பதும், இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்