வீடுபுகுந்து கொடுவாளால் வெட்டி பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

ஓமலூர் அருகே வீடு புகுந்து பெண்ணை கொடுவாளால் வெட்டி, நகையை பறித்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து ஓமலூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-10-23 22:30 GMT
ஓமலூர்,

ஓமலூரை அடுத்த மைலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரசு (வயது 27). இவருடைய கணவர் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளி. சரசு கடந்த 15.4.2013 அன்று வீட்டில் இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டார். சரசு வீட்டுக்குள் தண்ணீர் எடுக்க சென்றபோது பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் சரசு கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரசு அந்த மர்ம நபரை தடுத்தார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் அவரை வெட்டினார். இதில் சரசுவின் கை விரல்கள் துண்டானது. தலையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

சிறை தண்டனை

இதுகுறித்த புகாரின்பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சின்னவெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (39) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஓமலூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து நீதிபதி தயாநிதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், சரசுவை கொடுவாளால் வெட்டி தங்க சங்கிலியை பறித்ததற்காக கிருஷ்ணமூர்த்திக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், திருடும் எண்ணத்துடன் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்ததற்காக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் ஒவ்வொரு வழக்கிலும் தலா 2 மாதம் சிறை தண்டனையும், இதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வைரவேல் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்