அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு கால் எலும்பை கையில் பொருத்தி டாக்டர்கள் சாதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு கால் எலும்பை கையில் பொருத்தி அரசு டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

Update: 2019-10-24 23:00 GMT
புதுக்கோட்டை,

நார்த்தாமலை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் தேவிகா (வயது 30). இவருக்கு இடதுகை மணிக்கட்டின் அருகே கட்டி ஒன்று வளர்ந்ததால் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4-ந் தேதி சேர்ந்தார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது திசு பரிசோதனையில், அவருக்கு ஆஸ்டியோ கிளாஸ்டோமா என்று சொல்லப்படும் எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புற்றுநோய் இருப்பதால் கை எலும்பினை அகற்ற வேண்டும் என்ற நிலையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, எலும்பு சிகிச்சை தலைமை டாக்டர் ராஜ்மோகன், மயக்க மருத்துவர்கள் டேவிட், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொண்டகுழு அமைக்கப்பட்டது. கடந்த 11-ந் தேதி தேவிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அல்ட்ரா சவுண்ட் கருவியின் உதவி கொண்டு இடது கைக்கு உணர்வினை எடுத்து செல்லும் நரம்புகளை செயலிழக்க செய்தனர்.

கால் எலும்பு கையில் பொருத்தப்பட்டது

பிறகு தண்டு வடத்திற்கு அருகே மயக்க மருந்து செலுத்தி கால் பகுதியை உணர்விழக்க செய்தனர். பின்னர் புற்றுநோய் பாதிக்கப்பட்ட எலும்பு 10 சென்டிமீட்டர் அளவிற்கு வெட்டி எடுக்கப்பட்டது. கை நன்றாக இயங்க வேண்டும் என்ற காரணத்தினால் இடது காலில் உள்ள பிபுலா எலும்பு அகற்றப்பட்டு 10 சென்டிமீட்டர் அளவிற்கு அந்த கால் எலும்பு கையில் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இப்போது தேவிகா நலமுடன் உள்ளார். விரைவில் அவர் டிஸ்சார்ச் செய்யப்பட உள்ளார். இது குறித்து மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1½ லட்சம் வரை செலவாகும். இந்த சிகிச்சை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது. நோயாளி அறுவை சிகிச்சைக்கு பின் சிகிச்சை காலங்களில் முற்றிலும் ஏ.சி. அறையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறார் என்றார்.

மேலும் செய்திகள்