கூத்தாநல்லூர் அருகே, முன்விரோதத்தில் கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு தந்தை-மகன் கைது

கூத்தாநல்லூர் அருகே முன்விரோதத்தில் கணவன், மனைவியை அரிவாளால் வெட்டிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-24 22:15 GMT
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள காக்கையாடி கோம்பூர் வேளார் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது41). விவசாயி. இவருக்கும், இவருடைய சித்தப்பா உத்திராபதி (60) குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வம், உத்திராபதியின் வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்துவிட்டு தனது வீட்டுக்கு சென்றதாக கூறப் படுகிறது.

அரிவாள் வெட்டு

இதனை பார்த்த உத்திராபதியும், அவருடைய மகன் கிரிதரனும் (36) சேர்ந்து செல்வம் வீட்டிற்கு சென்று அவரையும், அவருடைய மனைவி விமலா ஆகிய 2 பேரை-யும் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி ஆகிய 2 பேரையும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விமலா கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்திராபதி (60), கிரிதரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்