திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; குழந்தை சாவு

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2019-10-25 23:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிரியாங்குப்பம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ருத்ரகிரி(வயது 38). பெயிண்டர். இவரது மகள் பூஜாஸ்ரீ (வயது 1½). இந்த நிலையில் நேற்று ருத்ரகிரி தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக திருவள்ளூர் சென்றுவிட்டு மீண்டும் பிரயாங்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது கடம்பத்தூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ருத்ரகிரியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ருத்ரகிரியும், பூஜாஸ்ரீயும் காயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பூஜாஸ்ரீ மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்