இரணியல் அருகே டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

இரணியல் அருகே டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-10-25 22:30 GMT
இரணியல்,

இரணியல் அருகே திங்கள்நகர் - குளச்சல் சாலையில் பூசாஸ்தான்விளை பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பலர் பூசாஸ்தான்விளை பகுதியில் திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திங்கள்நகர் பேரூர் காங்கிரஸ் தலைவர் பீட்டர்தாஸ், மாவட்ட பா.ஜனதா விவசாய அணி செயலாளர் ராஜ், ஜெகநாத், நிஷாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்