அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; நோயாளிகள் அவதி

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

Update: 2019-10-25 23:15 GMT
கடலூர்,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வை தமிழக அரசு டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மாணவர்களை கலந்தாய்வு மூலம் பணி அமர்த்த வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் இவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு டாக்டர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, வேப்பூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை உள்பட 10 அரசு மருத்துவமனைகளிலும், 64 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியாற்றி வரும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு பிரிவில் மட்டும் பணியாற்றினர். மற்ற பிரிவுகளில் டாக்டர்கள் பணியாற்றவில்லை. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர். ஒரு சில பிரிவுகளில் மட்டும் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றினர். இருப்பினும் பெரும்பாலான பிரிவுகளில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சிலர் தனியார் மருத்துவமனைகளை நாடி சென்றதையும் காண முடிந்தது.

இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கேசவன் தலைமை தாங்கினார். டாக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் 450-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் காலவரையற்ற போராட்டம் நீடிக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் கேசவன் தெரிவித்தார்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் சாமிநாதன் தலைமையில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மகப்பேறு, விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகளில் மட்டும் டாக்டர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பணிபுரிந்தனர். இந்த நிலையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.

நீண்ட நேரமாக மருத்துவமனை வளாகத்தில் வரிசையில் காத்திருந்த அவர்களுக்கு, சிறிது நேரத்துக்கு பிறகே டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதனால் ஒருசிலர் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதையடுத்து பணியில் இருந்த ஒரு டாக்டர் அங்கு வந்து பரிசோதனைகள் செய்து உரிய சிகிச்சை அளித்தார். எனவே வெகுநேரமாக நோயாளிகள் காத்திருந்து சிகிச்சை பெற்றதால், கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

மேலும் செய்திகள்