நடத்தையில் சந்தேகத்தால் காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவரும் விஷம் குடித்ததால் பரபரப்பு

காதலித்து திருமணம் செய்த இளம்பெண் கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியில் அவரது கணவரும் விஷம் குடித்தார்.

Update: 2019-10-26 23:00 GMT
குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் அருகே சிறுமலையை அடுத்து உள்ள பழையூரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 28). வேன் டிரைவர். இவரது மனைவி பசுபதி (26). இவர்கள் கடந்த 9 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு காமாட்சி என்ற பெண் குழந்தையும், லோகேஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

கணவரின் நடத்தையில் பசுபதி சந்தேகப்பட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பசுபதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பசுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ராஜா நேற்று காலை திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்