உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை; வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை

உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-10-26 22:45 GMT
மதுரை,

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளதாக வேளாண்வீள இணை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தற்போது பருவமழை தொடங்கி விட்டது. விவசாய பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 3 ஆயிரத்து 923 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 3 ஆயிரத்து 661 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 8 ஆயிரத்து 384 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2 ஆயிரத்து 57 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 459 மெட்ரிக் டன் என்ற கணக்கில் இருப்பில் உள்ளது.

மேலும், 3 ஆயிரத்து 40 டன் யூரியா மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இங்கிருந்து உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.இருப்பில் உள்ள உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய மறுத்தாலோ கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.

இதனை மீறுபவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும். உரங்களை பெறுவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதுகுறித்து விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனருக்கும், வேளாண்மை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கலாம். உரங்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்