ராக்கெட் பட்டாசு விழுந்து செருப்பு குடோன் தீப்பிடித்து எரிந்தது

ராக்கெட் பட்டாசு விழுந்து செருப்பு குடோன் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2019-10-28 22:15 GMT
கோவை,

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் கிரிதர்(வயது53). இவர் காந்தி புரம் கிராஸ்கட் ரோட்டில் செருப்புக்கடை நடத்தி வருகிறார்.

இந்த கடைக்கு சொந்தமான குடோன் ரத்தினபுரியில் உள்ளது.

இந்த குடோனில் இரவில் தீ விபத்து நடைபெற்றது. தீ மள,மள என்று பரவ தொடங்கியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோனில் இருந்த செருப்புகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.

தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, தீபாவளி பண்டிகைக்காக வெடிக்கப்பட்ட ராக்கெட் பட்டாசு விழுந்து குடோனில் தீப்பற்றிக்கொண்டது தெரியவந்தது. சேத விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, தீபாவளி பண்டிகையையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் பல இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. செருப்பு குடோன் தீவிபத்தை தவிர பெரிய அளவிலான தீவிபத்துகள் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்