“எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்” சுஜித்தின் தந்தை வேதனை

“எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்” என சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் வேதனை தெரிவித்தார்.

Update: 2019-10-29 23:00 GMT
திருச்சி,

குழந்தை சுஜித்தின் இறுதி சடங்கை முடித்துவிட்டு அவரது தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் மொட்டை அடித்தார். பின்னர் அவர், வெள்ளை நிற வேட்டியை உடலில் சுற்றியபடி சோகத்துடன் வீட்டில் அமர்ந்து இருந்தார். அவருக்கு அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நேரில் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இந்தநிலையில் குழந்தையை இழந்து வாடும் பிரிட்டோ ஆரோக்கியராஜ் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

எனக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் புனித்ரோசன் எல்.கே.ஜி. படித்து வருகிறான். இளைய மகன் சுஜித்வில்சன். சம்பவத்தன்று நான் தோட்ட வேலைக்கு சென்று இருந்தேன். எனது மகன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தகவலை போன் மூலம் எனது மனைவி கூறினார். உடனே நான் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தேன். இங்கு வந்து பார்த்தால் ஏராளமானோர் எனது மகனை காப்பாற்றி விட வேண்டும் என போராடிக் கொண்டு இருந்தார்கள்.

எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்

அரசு அதிகாரிகள், கிராம மக்கள் என அனைவரும் மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் 4 நாட்களாக இங்கு இருந்து தான் பணிகளை செய்தார்கள். ஆனாலும் என் மகனை காப்பாற்ற முடியவில்லை. எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான். குழந்தையை மீட்பது குறித்து இப்போது ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துக்களை சொல்லலாம். ஆனால் அரசு எடுத்த முயற்சியில் எனக்கு முழு திருப்தி தான். இனி எதுவும் பேசி பலனில்லை. ஆகையால் அதை பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்