ஈரோடு அருகே பரிதாபம்: நின்றிருந்த சரக்கு வாகனம் மீது ஆம்னி பஸ் மோதியது; 2 பேர் சாவு

ஈரோடு அருகே நின்றிருந்த சரக்கு வாகனம் மீது ஆம்னி பஸ் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-10-30 22:30 GMT
பவானி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த குருவன் மகன் சிவன் (வயது 21). சரக்கு வாகன டிரைவர். அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் ஸ்ரீகாந்த் (19). இவர் சரக்கு வாகனத்தின் கிளீனர் ஆவார். சிவனும், ஸ்ரீகாந்தும் நண்பர்கள் ஆவர்.

இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தினமும் சரக்கு வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு் திருப்பூர், தர்மபுரிக்கு எடுத்து செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு சரக்கு வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு 2 பேரும் ஒசூரில் இருந்து திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கங்காபுரம் பஸ் நிறுத்தத்தில் சென்றபோது திடீரென சரக்கு வாகனத்தி்ன் இடதுபுற டயர் பஞ்சர் ஆனது.

இதனால் வாகனத்தை நிறுத்திவிட்டு் 2 பேரும் கீழே இறங்கினர். அதன்பின்னர் மாற்று சக்கரத்தை எடுத்து வாகனத்தில் பொருத்துவதற்காக பின்னால் சென்றனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக சிவன், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி கன்னியாகுமரியை சேர்ந்த பஸ் டிரைவர் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்