சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார்.

Update: 2019-10-30 22:30 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 58). இவர்களது மகள் சுங்குவார்சத்திரம் அடுத்த காந்துர் கிராமத்தில் வசித்து வருகிறார். ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையையொட்டி மகளுக்கு பலகாரம் கொண்டு சென்று கொடுப்பதை விஜயலட்சுமி வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்றுமுன்தினம் பலகாரங்களை எடுத்து கொண்டு மகன் புண்ணியக்கோடியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சுங்குவார்சத்திரத்தை அடுத்த காந்துர் கிராமம் அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த விஜயலட்சுமி கையில் இருந்த பலகார பை அறுந்தது. அதை பிடிக்க முயன்ற விஜயலட்சுமி தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த விஜயலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சுங்குவார்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்