தஞ்சையில் ரெயில்வே இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது

தஞ்சையில் ரெயில்வேக்கு சொந்தமான இரும்பு கம்பிகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-30 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஏட்டு பிரபு, போலீஸ்காரர் மோகன் மற்றும் போலீசார் தஞ்சை -ஆலக்குடிக்கு இடையே உள்ள ரெயில்வே பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது தஞ்சையில் ரெயில்வே தண்டவாளம் வழியாக ஒரு வாலிபர் சாக்குப்பையுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓடினார். உடனே போலீசார் விரட்டிச்சென்று அவரை மடக்கி பிடித்தனர். மேலும் அவர் வைத்திருந்த சாக்குப்பையை சோதனை செய்ததில், அதில் தண்டவாளங்களை இணைக்கப்பயன்படும் இரும்பு கம்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இரும்பு கம்பி

மேலும் விசாரணை நடத்தியதில் அவர், ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த சாமிநாதன் (வயது 30) என்பதும், அவர் ரெயில்வேக்கு சொந்தமான இரும்பு கம்பிகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சாமிநாதனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து இரும்புக்கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்