2-வது முறையாக குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

சேலத்தில் 2-வது முறையாக ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2019-10-30 22:45 GMT
சேலம், 

சேலம் அஸ்தம்பட்டி மேற்கு விநாயகர் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்ராஜ் (வயது 23). இவர் கடந்த 6-ந் தேதி கிச்சிப்பாளையம் நாராயண நகர் பகுதியில் நடந்து சென்ற சூர்யா என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விக்னேஷ்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் மீது அழகாபுரம், அஸ்தம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் பதிவாகி இருந்து தெரியவந்தது. மேலும் ரவுடியான விக்னேஷ்ராஜை கடந்த ஆண்டு போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து விக்னேஷ்ராஜை 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்திட, போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்