பாணாவரம் அருகே, மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

பாணாவரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2019-10-31 22:45 GMT
பனப்பாக்கம், 

பாணாவரத்தை அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கொள்ளாபுரி (வயது 56), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் கொள்ளாபுரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கொள்ளாபுரி படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மோட்டார்சைக்கிளில் வந்து விபத்தை ஏற்படுத்திய 2 வாலிபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி கொள்ளாபுரியின் உறவினர்கள் குன்னத்தூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பாணாவரம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்