குமாரபாளையம் அருகே, மொபட்-கார் மோதல்; பெண் பலி - விவசாயி படுகாயம்

குமாரபாளையம் அருகே, மொபட்டும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியானார். விவசாயி படுகாயம் அடைந்தார்.

Update: 2019-11-01 22:45 GMT
குமாரபாளையம்,

சேலம் மாவட்டம் தேவூர் பக்கமுள்ள காவேரிப்பட்டியை சேர்ந்தவர் பூவாக்கவுண்டர் (வயது 60). விவசாயி. இவரது தம்பி முனியப்பன். இவருடைய மனைவி சரசு (50).

இந்த நிலையில் பூவாக்கவுண்டரும், சரசுவும் ஒரு மொபட்டில் குமாரபாளையம் பக்கமுள்ள பச்சாம்பாளையத்தில் உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். வழியில் பச்சாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையை அவர்கள் கடந்தபோது, அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் இவர்களது மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் கால் ஒடிந்து படுகாயம் அடைந்த பூவாக்கவுண்டர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் ஈரோடு ஜீவா நகரை சேர்ந்த பகவதியப்பன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்