பேய் என்பதா? கவர்னர் கிரண்பெடி பதிலடி

பேய் என்று விமர்சித்ததற்கு சமூகவலைதளம் மூலம் கவர்னர் கிரண்பெடி பதில் அளித்துள்ளார்.

Update: 2019-11-02 00:46 GMT
புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவைக்கும் கவர்னர் கிரண்பெடிக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக கவர்னர் மீது முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களும் புகார் கூறி வருகின்றனர். இதற்கு கவர்னரும் பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும் போது, கவர்னர் கிரண்பெடியை பேய் என்று விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நிதி கட்டுப்பாடுகள் இருந்தாலும் அரசு அதிகாரிகள் மக்களுக்கு அதிகளவு நன்மைகளை செய்ய வேண்டியது அவசியம். மக்கள் நலத்திட்டங்களில் எவ்வித கசிவும் இல்லாமல் அவர்களிடம் கொண்டு செல்லும் பொறுப்புள்ளது. அதை நாம் மக்களிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நம் பணிகள் மூலமாகவே அவர்களுக்கு தெரியவரும்.

குறிப்பாக நிலத்தடிநீர் மேம்பாடு கூட்டு முயற்சியால் நிகழ்ந்துள்ளது. நகர்புற வாய்க்காலை தூய்மைப்படுத்தியுள்ளோம். இதில் அரசுக்கு செலவில்லை. மழை நேரத்தில் வெள்ளம் வராமலும் தடுக்கப்பட்டது. பல நன்கொடையாளர்களால் இது சாத்தியமானது. ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்பட்டது.

ஆனால், பேய்கள் யாருக்கும் நல்லது செய்ய மாட்டார்கள். அனைத்தும் தனக்கே தேவை என்பதை பேய்களே நினைக்கும். குறிப்பாக மக்களை பேய்கள் பயமுறுத்தும். அரசு அதிகாரிகள் பணியானது மக்களை பாதுகாப்பது தான். பேய் என்ற வார்த்தை வேண்டப்படாத வார்த்தை. நாகரிகமற்றது. அருவருப்பானது. அந்த கருத்தை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்